மதுரை: மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் எஸ்ஐக்கள் வரை வார விடுமுறை வழங்கும் அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு முதல்வர் பிறப்பித்த அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்னை? வார விடுப்பு வழங்க தவறினால் காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம் என நீதிபதி கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவின் மீது நீதிபதி பட்டு தேவானந்த் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘காவல்துறையினரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி தமிழ்நாடு முதல்வர் அறிவித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், இந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. எனவே, அவரது மனு ஏற்கப்படுகிறது. காவலர்கள் முதல் எஸ்ஐக்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தாக்கல் செய்யலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.