அரசுக்கு ரூ.2.77 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தரின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்தவர் முருகேச பூபதி. இவரது பதவிக்காலத்தில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. நிபுணர்கள் அறிவுரையை மீறி, இந்த இயந்திரங்கள் கொள்முதல் செய்ததன் மூலம், தனியார் நிறுவனம் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் லாபமடையச் செய்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியராக இருந்த முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசு ஒப்புதல் பெறாததால், இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று துணைவேந்தர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பல்கலைக்கழக சட்டப்படி துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய அரசின் முன்அனுமதி தேவையில்லை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் முன் அனுமதியும் தேவையில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், கோவை சிறப்பு நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


