Sunday, June 15, 2025
Home செய்திகள்Banner News நாடு முழுவதும் 22 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

நாடு முழுவதும் 22 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

by Arun Kumar

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை இடமாற்றம் செய்யவும் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தற்போது ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரையும் இடமாற்றம் செய்ய கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதுசார்ந்த கூட்டம் மாதம் ஒருமுறை நடந்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யாகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து அதில் எடுக்கப்பட்ட முடிவில், ‘‘கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதேப்போன்று நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகள் நியமனம், நீதிபதிகள் இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவில், ‘‘மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கவுகாத்தி, பாட்னா, ஜார்கண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. இதில், நீதிபதி சஞ்சீவ் சச்சதேவா (மத்தியப் பிரதேசம்), நீதிபதி விபு பக்ரு (கர்நாடகா), நீதிபதி ஆஷுதோஷ் குமார் (கவுகாத்தி), நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (பாட்னா), நீதிபதி தார்லோக் சிங் சவுகான் (ஜார்க்கண்ட்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருப்பவர்களை இடமாற்றம் செய்தும் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி நீதிபதி ராமச்சந்திர ராவ் (ஜார்க்கண்டிலிருந்து- திரிபுராவிற்கு), அபரேஷ் குமார் சிங் (திரிபுராவிலிருந்து- தெலங்கானாவிற்கு), கே.ஆர்.ஸ்ரீராம் (சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு), எம்.எம்.ஸ்ரீவஸ்தவா (ராஜஸ்தானிலிருந்து- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு) ஆகியோர் இடமாற்ற செய்ய பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி அத்துல் எஸ்.சந்துர்கர் ஆகியோராவர்.

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில், இந்த பரிந்துரையின் மூலம் 33 இடங்கள் பூர்த்தியாக உள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவில் மொத்தமாக உச்ச நீதிமன்றத்திற்கு புதியதாக மூன்று நீதிபதிகளை நியமிக்கவும், ஐந்து உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கவும், நாடு முழுவதும் 22 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் மூலம் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இந்த நீதிபதிகள் தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள்.

நீதிபதிகளின் இந்த மாற்றங்கள், நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பங்களையும், நிர்வாகத் தேவைகளையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டாலும், சில நீதிபதிகள் இந்த மாற்றங்களை விமர்சித்துள்ளனர். அதில் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி துப்பாலா வெங்கட ரமணா, இந்த மாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனம் ஆகிய அனைத்து பரிந்துரைகளும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

* 2 நீதிபதிகள் மாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இதேபோல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி விவேக் குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் மொத்த ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் பட்டு தேவானந்த் அவரது சொந்த மாநிலத்திற்கும், விவேக் குமார் சிங் அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கும் மாற்றம் செய்யப்படவுள்ளனர். இவர்கள் மாற்றம் செய்யப்பட்டால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறையும். இந்த நிலையில், இந்த ஆண்டு நீதிபதிகள் சிவஞானம் ஜூன் 1ம் தேதி, இளங்கோ ஜூன் 5ம் தேதி, டீக்காராமன் ஜூன் 9ம் தேதி, சாத்தி குமார் சுகுமார குரூப் ஜூலை 18, ஆர்.சுப்பிரமணியன் ஜூலை 25ம் ேததி ஓய்வு பெறவுள்ளனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 53ஆக குறையும். மொத்த காலி பணியிடங்கள் 22 ஆக அதிகரிக்கும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi