Saturday, June 14, 2025
Home செய்திகள் 231ல் 101 பேர் மீது மட்டுமே நடவடிக்கை லஞ்ச வழக்கில் சிக்கியவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவி: ஐகோர்ட் கிளை கண்டனம்

231ல் 101 பேர் மீது மட்டுமே நடவடிக்கை லஞ்ச வழக்கில் சிக்கியவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவி: ஐகோர்ட் கிளை கண்டனம்

by Arun Kumar

மதுரை: லஞ்ச வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தாமதப்படுத்த அதிகாரிகள் மறைமுகமாக உதவுகிறார்கள் என்று கூறி ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ல் கரூர் மின்வாரிய ஊழியர் ஒருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கணக்கு மேற்பார்வையாளர் பணியாற்றிய சரவணன், உட்பட 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சரவணனுக்கு 2021ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், ஒழுங்கு நடவடிக்கைக்கு காலக்கெடு விதித்து அரசும், நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. எனினும் எனக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மின்வாரியம் தரப்பில், மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை வசமிருக்கும் ஆவணங்கள் கேட்கப்பட்டன. அவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றவழக்கு நிலுவையில் இருப்பது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தடையல்ல என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எனினும் வேண்டுமென்றே லஞ்ச வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு முடிய 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் லஞ்ச வழக்கில் சிக்கிய 231 ஊழியர்களில் 101 பேர் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து ஆவணங்கள் வராததால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச வழக்கில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை வழங்குவதில்லை. அரசு துறைகள் இடையிலான இந்த முரண்பாடுகளால் லஞ்ச வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அரசு பல்வேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் சில அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதை தாமதப்படுத்தி லஞ்ச வழக்கில் தொடர்புடையவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். இதை அரசு கவனிக்க வேண்டும். இதனால் தங்கள் துறை அலுவலகத்தில் உள்ள ஜெராக்ஸ் நகல் ஆவணங்களின் அடிப்படையில் ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம்.
இதற்கு மேலும் ஒழுங்கு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டால் அந்த தாமதத்துக்கு காரணமான அதிகாரி குறித்து, சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 2018ல் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. 2019ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை தாமதமாக கருத முடியாது. தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதினாலும் லஞ்சப்புகார் தீவிரமானது என்பதால் குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் விசாரணையை சந்திக்க வேண்டும். மனுதாரர் மீதான லஞ்ச வழக்கை கரூர் நீதிமன்றம் 6 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi