சென்னை: அமெரிக்கா சென்றுள்ள வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அங்கு அதிக மகசூல் தரக்கூடிய கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்து விவசாயிகள் அதிக மகசூல் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவாக விவாதித்தார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விஸ்கான்சின் பல்கலைக்கழக செயலாளர் ரெண்டி ரொமன்ஸ்க்கி, ஷாலா வெர்னர், பயிர் பாதுகாப்பு மேலாளர், பயிர் பாதுகாப்பு பணியகம் ஜுலி லாஷா, நிர்வாக இயக்குநர் விஸ்கான்சின் மாகாண வேளாண்மைத்துறை மற்றும் திருடிராய் ஸ்பிரேக்ஸ் இயக்குநர். உணவு பாதுகாப்பு துறை ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின்போது, திடீரென பரவும் பூச்சிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும், முன்னறிவிப்பு செய்வது பற்றிய நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. விஸ்கான்சின் மாகாணத்தில் அதிக மகசூல் தரக்கூடிய கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்து தமிழக விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதன்மூலம் வருமானத்தை பெருக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவாக விவாதித்தார்.
பின்னர், 24ம் தேதி வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கான்செஸ் மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் கான்சாஸ் மாகாண வேளாண்துறை செயலாளர், மாகாணத்தின் ஏற்றுமதி இயக்குநர், பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் இங்கு கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடினார்.