*அறுவடைக்கு தயராக பஞ்சு வெடித்துள்ளது
கரூர் : கரூர் மாவட்டம் சணப்பிரட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடைக்கு தயாராக பருத்தியில் பஞ்சு வெடித்துள்ளது.கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி என இரண்டு ஆறுகள் ஓடுகிறது. வாங்கல், தவிட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, திருமுக்கூடலூர், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனத்திலும், செட்டிப்பாளையம், ராஜபுரம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனம் வாயிலாகவும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
மேலும், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் இருந்து வாய்க்கால்கள் மூலமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதுபோல, கரூர் மாவட்டம் சணப்பிரட்டி உட்பட இதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த பகுதிகளை விவசாயிகள், தங்கள் பகுதி நிலங்களில் அதிகளவு வெண்டை, கோரை, மரவள்ளிக் கிழங்கு மற்றும் பருத்தி போன்ற பயிர் சாகுபடியை ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், சணப்பிரட்டி பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு, அந்த செடியில் தற்போது பஞ்சு வெடித்து வெள்ளை நிறத்தில் ரம்மியமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.