செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். ஆனால் சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையாம். இதை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து திருமண ஏற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, 1098 என்ற எண்ணில் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் பரிமளா ேநற்று சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவது தெரிந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரை எச்சரித்தார்.
இதையடுத்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல காப்பத்தில் சேர்த்தார். இதுகுறித்து பரிமளா செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுமியின் தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.