Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage 200 அடி உயரத்தில் இருந்து திடீரென 3500 அடி உயரம் சென்று வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்: சென்னையில் தரையிறங்கும் முன் பரபரப்பு

200 அடி உயரத்தில் இருந்து திடீரென 3500 அடி உயரம் சென்று வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்: சென்னையில் தரையிறங்கும் முன் பரபரப்பு

by Ranjith

சென்னை: சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தது. திடீரென மீண்டும் உயிரே எழும்பி, வானில் 3,500 அடி உயரம் சென்று வட்டமடித்து பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னையில் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் 186 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, தாழ்வாக பறந்து விமான ஓடுபாதையை நெருங்கியது.

ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக, 200 அடி உயரத்தில் மிக தாழ்வாக பறந்த விமானம் திடீரென மின்னல் வேகத்தில் உயரே எழும்பி, சுமார் 3,500 அடி உயரத்தில் வானில் வட்டமடித்து பறக்க தொடங்கியது. அதோடு அந்த விமானம், சுமார் 20 நிமிடங்கள் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. அதன் பின்பு காலை 10.37 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் வந்து விமானம் தரையிறங்கியது. இதேபோல், ஏர் இந்தியா விமானம் தரை இறங்க வந்தது திடீரென உயரே சென்று, வானில் பறந்து விட்டு, அதன் பின்பு தாமதமாக தரையிறங்கியது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது: இந்த விமானம் தரை இறங்கும்போது, தரைக்காற்றின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. அப்போது விமானம் சுமார் 200 அடி உயரத்தில் மிக தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. தரைக்காற்று சாதகமாக இல்லாத நேரத்தில் விமானம் தரை இறங்கினால், ஓடுபாதையை சரியாக கணித்து விமானத்தை இயக்க முடியாது என்பதால், தரையிறங்க வந்த விமானம் அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் விமானத்தை வானில் பறக்கச் செய்துள்ளார்.

சில நிமிடங்கள் விமானம், வானில் பறந்துவிட்டு, அதன் பின்பு சரியான முறையில் ஓடுபாதையில் தரையிறங்கி உள்ளது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. விமானங்கள் தரையிறங்கும் போது, சரியான சூழ்நிலை அமையவில்லை என்றால் விமானங்கள் மீண்டும் வானில் பறந்து விட்டு, தரை இறங்குவது வழக்கமானது தான். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், தரை இறங்க வந்த விமானம், திடீரென மீண்டும் வானில் பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi