மும்பை: மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மராட்டியத்தில் மும்பை உள்பட நகரங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. மும்பை கலீனா, செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி கனமழை காரணமாக நிரம்பியது. கனமழை காரணமாக புனே கதக்வஸ்லா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விஹார் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் சாலையில் வழிந்தோடுகிறது. தம்ஹினி மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக ராய்கட் -புனே சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தனர்.
புனேவில் தண்ணீரில் மூழ்கியிருந்த தள்ளுவண்டியை வெளியே எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். புனே புறநகர் பகுதியில் உள்ள அதர்வாடி கிராமத்தில் மழையால் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம் அடைந்தார்.