திருவனந்தபுரம் : மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தெற்கு கொங்கன் – கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. வடக்கு கர்நாடகா, கோவா கடற்கரை இடையே நிலைகொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரும். அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று 25 அல்லது 26ம் தேதியில் புயலாக மாறும். அது புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை முதல் 10 நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வால்பாறை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. மேலும் நீலகிரி, கூடலூர், வயநாடு, இடுக்கிக்கு சுற்றுலா சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வரும் மே 27, 30ம் தேதி மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.