*குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தொடர் கனமழை காரணமாக தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனை சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரே இந்த அருவியில் தண்ணீராக கொட்டும். இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். நீண்ட தூரம் ஆறாக பயணித்து இந்த இடத்தில் அருவியாக விழுகின்றது. இந்த அருவியில் தண்ணீர் அதிகளவில் விழுவதால் குடகனாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சித்தையன்கோட்டை, சித்தரேவு, போடிகாமன்வாடி பகுதிகயிலுள்ள குளங்களுக்கு குடகனாறு ஆற்றில் தண்ணீர் சென்று வருகின்றது. இதனால் குளங்கள் நிரம்பி வருகின்றன. குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.