சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மதுரை, விருதுநகர், ராஜாபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், கோயில்பட்டி, கம்பம், போடி, கொடைக்கானல், பெரிய குளம், உசிலம்பட்டி, சிவகாசி, திருமங்கலம், நெல்லை மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்தது. வெப்பநிலையை பொருத்தவரையில் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று உயரும் வாய்ப்புள்ளது. இன்று இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும். 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும். இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் 99 டிகிரி வெயில் நிலவும்.