செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செட்டிப்புண்ணியம், வெங்கடபுரம், கொளத்தூர், குருவன்மேடு, வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், திம்மாவரம், கொங்கணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை, சாஸ்திரம்பாக்கத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் செங்கல்பட்டு, திம்மாவரம், வில்லியம்பாக்கம், பாலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது.
இதில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி இல்லை. எனவே, விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த குண்டு சம்பா, ஐ.ஆர்.எட்டு, கோதுமை சம்பா உள்ளிட்ட வகையான நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணானது. நான்கு ஆண்டுகளாக நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க இடவசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும், இடம் ஒதுக்காததால் தற்போது பெய்த மழையில் அனைத்து மூட்டைகளும் மழையில் நனைந்து சேதனமானது.
இதனால், அரசு நனைந்த நெல் மூட்டைகளுக்கு பாதுக்காப்பாக வைக்க இடவசதி செய்து தரவேண்டும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஒன்றியங்களில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று இரவு கன மழை பெய்தது.
இந்நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி இல்லாததால் விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த குண்டு, சம்பா, கோதுமை சம்பா, உள்ளிட்ட வகையான நெல் மூட்டைகள் பெரும்பாலானவை மழையில் நனைந்து வீணானது. மேலும் மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தில் உள்ள திறந்தவெளி கொள்முதல் நிலையத்தில் தொடர் மழை காரணமாக நேற்று நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.