Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடலுக்கு வலு சேர்க்கும் பனங்கிழங்கு!

நன்றி குங்குமம் டாக்டர்

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட சில நாட்களில் அது முளைவிட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம். பனங்கிழங்கின் முனை கூராகவும், அடி பருத்து கூம்பு வடிவிலும் காணப்படும்.

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.

பனங்கிழங்கு வாயுதொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்றுவலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும். வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவாக்கி அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்று விட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும். பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும்.அவித்த பனங்கிழங்கை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும். பனங்கிழங்கை அவித்து காய வைத்து பொடித்து, அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கை அவித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து துவையலாகவும் உண்ணலாம்.பனங்கிழங்கு குளிர்ச்சியைத் தரவல்லது. மேலும் குளிர் காலத்தில் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் கிழங்கு இது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் உள்ளது.