Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாய் சுகாதாரம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாய் என்பது நாம் உணவை உட்கொள்வதற்கோ அல்லது பேசுவதற்கோ பயன்படும் ஒரு உறுப்பு மட்டுமல்ல. அது நம் உடலின் நுழைவாயில் ஆகும். பல நேரங்களில், உடலில் ஏற்படும் நோய்களை வெளிப்படுத்தும் இடமாக வாய் உள்ளது. வாய் மூலமாக நாம் சாப்பிடுகிறோம், குடிக்கிறோம், சுவாசிக்கிறோம், பேசுகிறோம் மற்றும் சிரிக்கிறோம். ஆனால், நாம் பற்களில் ஏதேனும் வலி வந்தால் மட்டுமே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுகிறோம். வாய்வழி சுகாதாரத்தை ஒரு விருப்பத் தேர்வாகவே வைத்திருக்கிறோம். ஆனால், வாயில் ஏற்படும் பாதிப்பு வாயோடு நின்றுவிடுவதில்லை என்பது குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை என்கிறார் வாய் மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த ஆலோசகர் மருத்துவர் அபிலாஷ் பாஸ்கரன். அவர் மேலும் கூறியதாவது:

வாய் நலம் மிக முக்கியமானது

வாய்வழி சுகாதாரம் என்பது பற்களை வெண்மையாக வைத்துக்கொள்வது மட்டுமல்ல; அது முழு உடல் ஆரோக்கியத்துக்கான திறவுகோலாகும். செரிமான மண்டலம் மற்றும் சுவாச மண்டலத்திற்குச் செல்லும் பாதையாக வாய் உள்ளது. உடலின் மற்ற பாகங்களில் என்ன நடக்கிறது என்பதை வாயின் நிலை பல சமயங்களில் பிரதிபலிக்கிறது. வாயைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், அது நோய்த்தொற்று மற்றும் வீக்கங்களை உருவாக்கி, உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும்.

உடல் நலத்துடன் தொடர்பு

மோசமான வாய் சுகாதாரம் பற்சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் நீண்ட கால நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட ஈறுகளிலிருந்து வரும் தீய பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்குள் செல்லலாம். வாய் சுகாதாரம் சரியாக இல்லாவிட்டால் இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் கர்ப்பக்கால பிரச்னைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உதாரணமாக, ஈறு நோய் இருந்தால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். அதேபோல், சர்க்கரை நோய் இருந்தால் ஈறு பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு சங்கிலித் தொடர் போன்றது.

ஊட்டச்சத்திற்கு வாய் நலம் மிக முக்கியம். பல் வலி, பல் இல்லாமை அல்லது சரியாகப் பொருந்தாத செயற்கைப் பற்கள் இருந்தால் உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். உணவை மென்று சாப்பிடும் திறன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வாழ்க்கை முறையையும் பாதிக்கிறது. நமது பேச்சு, முகத் தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை பற்கள் மற்றும் ஈறுகளின் நிலையைப் பொறுத்தே அமைகின்றன. இது சமூகத்தில் நாம் பழகும் முறையையும், மனநலத்தையும் பாதிக்கிறது.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள்

குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் நல்ல வாய் நலம் அவசியம். பல் வலி மற்றும் நோய்த்தொற்றுகள் இருந்தால் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது, பள்ளிக்குச் செல்வது தடைபடும். முதியவர்களைப் பொறுத்தவரை, வாய் நலத்தைப் பராமரிப்பது அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல், தன்மானத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ உதவுகிறது.

பற்களையும் தாண்டி...

வாய் சுகாதாரம் என்பது பற்களைப் பற்றியது மட்டுமல்ல. ஈறுகள், நாக்கு, தாடை எலும்புகள், உமிழ்நீர் சுரப்பிகள் மற்றும் வாயின் உட்புறத் திசுக்களும் இதில் அடங்கும். உதாரணமாக, வாய் புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் சிறிய புண் அல்லது தழும்பாகத் தான் தெரியும், வலி இருக்காது. வழக்கமான பல் மருத்துவப் பரிசோதனை மூலம் மட்டுமே இத்தகைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.

வருமுன் காப்போம்

தினமும் பல் துலக்குதல், பற்களுக்கு இடையே நூல் விட்டுச் சுத்தம் செய்தல், சத்தான உணவு மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை ஆகியவை ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு அவசியம். பல நோய்கள் முதலில் வாயில் தான் அறிகுறிகளைக் காட்டும் என்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற இது உதவும்.பெரும்பாலான வாய்வழி நோய்களை நம்மால் தடுக்க முடியும். தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, ப்ளாஸிங் செய்வது, இனிப்பு உணவுகளைக் குறைப்பது மற்றும் பல் மருத்துவரைத் தொடர்ந்து சந்திப்பது போன்ற எளிய பழக்கங்கள் மூலம் பிரச்னைகள் வரும் முன்பே தடுக்கலாம்.

பல் வலி வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரையைச் சோதிப்பது போல, பல் பரிசோதனையையும் ஒரு வழக்கமான சோதனையாக செய்து கொள்ள வேண்டும். வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது உங்கள் முழு உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான முதலீடாகும். ஆரோக்கியமான வாயே ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை ஆகும். எனவே, வாயை சுகாதாரமாக வைத்திருப்போம்; நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்