Friday, July 18, 2025
Home செய்திகள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 4% இடஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் யார், யார்? விவரம் கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 4% இடஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் யார், யார்? விவரம் கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை

by Ranjith

சென்னை: தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களின் விவரங்களை ஆய்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் 4 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதிபெற்றவர்கள் எவரேனும் இருந்தால் அதன் விவரங்களை ஆய்வு செய்து உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கிடையே தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2005-06ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் மாற்றம் செய்து 2006-07, 2007-08, 2008-09ம் கல்வியாண்டுகளில் முதுநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எவரேனும் 4 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்றிருப்பின் அதுகுறித்த விவரங்களையும் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi