சண்டிகர்: அரியானா மாநிலம், சோனிபட்டை சேர்ந்தவர் ஷீத்தல் என்ற சிம்மி(20). மாடல் அழகியான இவர் பல்வேறு மியூசிக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.கடந்த 14ம் தேதி ஷூட்டிங் இருப்பதாக பெற்றோரிடம் சொல்லி வீட்டை விட்டு அவர் வெளியே சென்றார். அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அவரை பல இடங்களில் தேடினர். அதன் பிறகு நேற்று முன்தினம் கார்கோடா என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ஷீத்தலின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அனாதையாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் இஸ்தானாவை சேர்ந்த நபருக்கு சொந்தமானது. ஆரம்ப கட்ட விசாரணையில் ஒரு ஆணுடன் ஷீத்தல் காரில் இருந்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.