புதுடெல்லி: அரியானா மாநிலம் பிவானி பிரேம் நகரை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ரவீனா. இவர்களுக்கு 2017ல் திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். ரவீனா பிரபல யூடியூபர். ரவீனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 34,000 க்கும் மேற்பட்ட பாலோயர்களும், யூடியூப் சேனலில் 5,000க்கும் மேற்பட்ட பாலோயர்களும் உள்ளனர். ரவீனா வெளியிடும் வீடியோக்கள் பெரும்பாலும் நகைச்சுவையானவை மற்றும் குடும்ப பிரச்னைகள் தொடர்பானவை. இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் என்பவருடன் ரவீனாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்திற்கு பிறகு, இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் வீடியோ பதிவேற்றுவது பிரவீனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரவீன் வீட்டிற்கு வந்தபோது, சுரேசும் ரவீனாவும் தகாத முறையில் இருப்பதை நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று இரவு ரவீனாவும், சுரேஷுடன் இணைந்து, தனது துப்பட்டாவை வைத்து பிரவீனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவரும் இணைந்து, பிரவீனின் உடலை எடுத்து சென்று 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளனர். சில நாட்களாக பிரவீன் குறித்து அவரது குடும்பத்தினர் ரவீனாவிடம் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறிவந்துள்ளார். சந்தேகமடைந்த பிரவீனின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 3 நாட்களுக்கு பிறகு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மார்ச் 26ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ரவீனாவும், சுரேஷும் பிரவீனின் உடலை பைக்கில் ஏற்றிக்கொண்டு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள கால்வாய் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போது சுரேஷ், ரவீனா இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு பிரவீன் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.