Tuesday, May 13, 2025
Home ஆன்மிகம் தீவு மக்களை காப்பாற்றும் பீச்சுபள்ளி அனுமன்

தீவு மக்களை காப்பாற்றும் பீச்சுபள்ளி அனுமன்

by Porselvi

தெலுங்கானா மாநிலம், பீச்சுபள்ளி என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரை ஒட்டிவுள்ள “பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை’’ பற்றி, “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்’’ பகுதியில் காணலாம்.

முதல் இணைப்புப் பாலம்

மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால், தெலுங்கானாவின் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஜூராலா நீர் மின் திட்டத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணா நதிக்கரையின் அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி, தேசிய நெடுஞ்சாலை (NH7) ஒட்டி அமைந்துள்ளதால், எண்ணற்ற பல ஊர்களுக்கு செல்லும் மக்கள், இங்கு சற்று நேரம் அனுமனைத் தரிசித்துவிட்டு செல்கிறார்கள். 1950களில் அனுமனின் கோயில் அருகிலேயே தெலுங்கானாவிற்கும் மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கும் இடையே மிக பெரிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலம், அன்றைய வர்த்தகம் செய்ய பெரிதும் உதவியது. மேலும், இது தென்னிந்தியாவிலேயே முதல் மற்றும் முக்கிய இணைப்புப் பாலங் களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சாரல் மழை

கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த அனுமான் கோயில் அமைந்துள்ளதால், எப்போதும் இங்கு குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த அனுமன் கோயிலுக்கு வருவோர், கிருஷ்ணா ஆற்றிலும் சற்று நேரம் செல வழித்து செல்கிறார்கள். மேலும், ஆற்றின் அருகே ஒரு சிவலிங்கமும் இருப்பதால், சிவனையும் தரிசித்துவிட்டு செல்கிறார்கள். பருவமழை காலங்களில், சிவலிங்கத்தின் மீது சாரல் விழும். ஹாஹா… இந்த காட்சியினை விவரிக்கவே முடியாது. கண்களுக்கு இதமான குளிர்ச்சியைத் தரும். இதனைக் காண உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் வந்து ரசிப்பார்கள்.

ராம நவமி கொண்டாட்டம்

1992 ஆம் ஆண்டு, பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் ஒரு அழகிய ராமர் கோயிலும் கட்டப்பட்டது. ராமர் அருகில் சீதா – லட்சுமணன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். ராம நவமி தினத்தில் வாணவேடிக்கை முழங்க கோலாகலமாக ராமநவமி கொண்டாடப்படும். ரங்காபூர், புன்யாத்பூர், ஜானம்பேட்டா, ராமாபூர், குர்ரம்கடா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒன்றுகூடி, நீர் மோர், பானகம் ஆகியவைகளை அருந்தி மகிழ்ச்சியோடு கொண்டாடுவர்.12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் புஷ்கர ஸ்நானத்திற்காக, கிருஷ்ணா நதி களிலும் பக்தர்கள் ஸ்நானம் செய்வதுண்டு. அந்த சமயத்தில், பீச்சுபள்ளி ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலிலும் சில படித்துறைகள் திறந்துவிடப்படும். அதில் பக்தர்கள் ஸ்நானம் செய்து அனுமனை வழிபடுவர்.

இரண்டு தீவுகள்

கிருஷ்ணா நதிக்கரையில் இரண்டு தீவுகள் இருக்கின்றன. ஒன்று குர்ரம்கடா, மற்றொன்று நிஜாம் கோண்டா. இந்த தீவுகள் பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் அருகில் இருப்பதால், கிருஷ்ணா நதியில் வெள்ளம் ஏற்பட்டாலோ, அல்லது பேரிடர் காலங்களில் இந்த இரண்டு தீவுகளில் வசிக்கும் மீனவ மக்கள், பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டிய மறுநொடியில் அவர் அருள்வதாக இப்பகுதி மக்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், இந்த தீவில் வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டு விசேஷ தினத்தில் அனுமனை வேண்டி வழிபாடு செய்கிறார்கள்.தீவு மக்களை மட்டும் அனுமன் காப்பாற்றவில்லை. பீச்சுப்பள்ளி அனுமனை யார் ஒருவர் மனமுருகி வேண்டுகிறார்களோ, அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் அனுமன் உடனே நிறைவேற்றுகிறார்.

இனி யார் பூஜை செய்வது?

பதினைந்தாம் நூற்றாண்டில், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், தனது சீடர்களோடு தினசரி கிருஷ்ணா நதியில் ஸ்நானம் செய்து தனது நித்ய பூஜைகளை பீச்சுபள்ளியில் செய்திருக்கிறார். பீச்சுபள்ளி பிடித்துப்போக, இந்த இடத்திலும் அனுமன் வரவேண்டும் என்று எண்ணிய வியாசராஜர், அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுதான் தற்போதுள்ள பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியாக பிரசித்தி பெற்று, சுற்றுவட்டார பல ஊர் மக்களுக்கு அருள்கிறார்.இங்கு அனுமன், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு ஒரு அருமையான கதை ஒன்று உள்ளது. வியாசராஜர், அனுமனை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார். பிரதிஷ்டையும் செய்துவிட்டார். அந்த அனுமாருக்கு தொடர்ந்து வியாசராஜரே பூஜைகளையும் செய்துவந்தார். நாட்கள் செல்ல, வியாசராஜர் அவ்விடத்தை விட்டு தேச சஞ்சாரம் செல்ல காலம் வந்தது. அனுமனுக்கு இனி யார் பூஜை செய்வார் என்ற கேள்வியும் மன வருத்தமும் வியாசராஜருக்கு ஏற்பட்டது.

முதலில் தரிசிக்கும் நபர்

அன்றிரவு அவரது கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, “கவலை வேண்டாம். நாளைய தினம் என்னை தரிசிக்க வரும் முதல் நபரே எனக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்’’ என்று உத்தரவு கொடுக்கிறார். மறுநாள் காலையில் வியாசராஜர் தூக்கத்திலிருந்து எழுந்தபோது, ​​ஒரு இளம் பழங்குடி சிறுவன் அனுமனை பிரார்த்தனை செய்வதைக் கண்டார். அந்த இளம் பழங்குடி சிறுவனின் பெயர்தான் `பீச்சுப்பள்ளி’. அனுமன் தனது கனவில் சொன்னது போல், பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனை இந்தக் கோயிலுக்கு அர்ச்சகராக நியமித்தார், வியாசராஜர். அன்றிலிருந்து பீச்சுப்பள்ளி, கோயிலுக்கு அர்ச்சகரானார். இன்றும்கூட இந்த ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு, பழங்குடியினரே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பீச்சுப்பள்ளி பூஜித்ததால் அனுமனை `பீச்சுப்பள்ளி ராயுடு’ என்றுகூட செல்லமாக பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

மன்னர் கட்டிய கோயில்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கத்வால் மன்னர்களால் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டது. காலப் போக்கில், இன்று மிக பிரம்மாண்ட ஆலயமாக திகழ்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததுமே ஒரு பக்கம் கருடனின் மிக பெரிய சிலையும், மறுபக்கம் அனுமனின் சிலையும் காணலாம். அனுமன் கோயில் என்றாலே அனுமன் ஜெயந்தி விழா பிரபலமல்லவா! இங்கும் அனுமன் ஜெயந்தி விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi