Thursday, June 8, 2023
Home » மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பிரவேசம்; ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பிரவேசம்; ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

by Suresh

திருவாரூர்: மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர், சூரியனார் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்றிரவு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் குரு பரிகார கோயிலான ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி:தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு சரியாக 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இங்கு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். இன்றும் பக்தர்கள் குவிந்தனர். திட்டைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. குருப்பெயர்ச்சியையொட்டி வரும் 1ம் தேதி லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. இதேபோல் சூரியனார் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi