சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, வாரப்பட்டி கிராமம், புளியமரத்து பாளையத்தில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டமானது. இயந்திரங்கள் உடைந்து சிதறியது. இந்த தொழிற்சாலை உத்தரகாண்ட் மாநிலம் டோராடூன் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் (63) என்பவருக்கு சொந்தமானது. இங்கு இயங்கும் தொழிற்கூடம் கோவை சுல்தான் பேட்டையை சேர்ந்த சந்திரகுப்தன் (68) என்பவரது பெயரில், கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயன்படுத்தும் பவுடர், பட்டாசு திரி தயாரிக்கப்படுகிறது. இங்கு 120க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 5க்கும் மேற்பட்ட குடோன்களில் பல்வேறு நிலைகளில் வெடிமருந்து மற்றும் ரசாயன கலவைகள் கையாளப்பட்டு வருகிறது. நேற்று மதியம் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயன்படுத்தும் பவுடர் தயாரிக்க தேவையான 100 கிலோ வெடிமருந்தை இயந்திரத்தில் நிரப்பி கலவை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 100 கிலோ வெடிமருந்து திடீரென வெடித்தது.
இதில் கட்டிடம் தரைமட்டமானது. இயந்திரங்களும் சேதமடைந்தன. இந்த வெடி விபத்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். விபத்து நேரத்தில் கட்டிடத்திற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.