அகமதாபாத்: குஜராத்தின் கட்லோடியா பகுதியில் தனியார் பள்ளியில் கடந்த 29ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்து மாணவர்கள் தொழுகை செய்யும்படி கூறப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ பள்ளியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சில இந்து அமைப்புக்கள் இந்து மாணவர்களை தொழுகை செய்வதற்கு கட்டாயப்படுத்தியதாக புகார் எழுப்பியுள்ளனர். பள்ளியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அகில பாரதிய வித்யார்தி பரிஷத், பஜ்ரங் தளம் மற்றும் இதர வலது சாரி அமைப்புக்கள் பள்ளி முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. பல்வேறு மதங்களின் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த ஒரு மாணவரும் இஸ்லாமிய தொழுகையை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை என பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும் எழுத்து பூர்வமாக மன்னிப்பும் கோரியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.