அகமதாபாத்: குஜராத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பெண் உள்பட 4 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். குஜராத்தின் போர்பந்தரில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், பெண் உள்பட 4 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் உபேத் நசீர் மிர், ஹனான் ஹயத் ஷோல், முகமது ஹஜிம் ஷா ஆகியோர் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் ஆவர்.
சுமேரா பானு மட்டும் சூரத்தை சேர்ந்தவர். இது குறித்து டிஜிபி விகாஸ் கூறுகையில், ‘’இவர்களில் 3 ஆண்கள் மட்டும் போர்பந்தரில் இருந்து மீன்பிடி படகு மூலம் சர்வதேச நீர் எல்லைக் கடந்து ஆப்கானிஸ்தான் வழியாக ஈரான் சென்று ஐஎஸ் கொரசான் அமைப்பில் சேர திட்டமிட்டிருந்தனர்,’’ என்று தெரிவித்தார்.
கைதானவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படை தெரிவித்துள்ளது.