கூடலூர்: லோயர்கேம்ப் அருகே, வாழைத் தோட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனக் குழாய்கள் (ஹொஸ்கள்) திருடியது தொடர்பாக, நால்வரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சொட்டுநீர் பாசனக் குழாய்களுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், கீழக்கூடலூரில் உள்ள கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (72). இவருக்கு சொந்தமாக லோயர்கேம்ப் அடுத்துள்ள கண்ணகிபுரம் நாயக்கர் தொழு மற்றும் வெட்டுக்காடு அருகே, சுமார் 35 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. அங்கு சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பழனிச்சாமி வழக்கம்போல் தோட்டத்தை பார்வையிட சென்றுள்ளார்.
அப்போது சிலர், தோட்டத்தில் இருந்த சொட்டு நீர் பாசனக் குழாய்களை (ஹோஸ்கள்) திருடி சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பழனிச்சாமி தனியாக இருந்ததால் திருடியவர்களை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இது தொடர்பாக குமுளி காவல் நிலையத்தில் பழனிச்சாமி நேற்று புகார் கொடுத்தார். அப்போது செல்போனில் படம் பிடித்த ஆதாரத்தையும் காட்டியுள்ளார்.
இதன்பேரில் சார்பு ஆய்வாளர் தீபக் (பொ) தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கூடலூரைச் சேர்ந்த நதியழகன், நந்தா, செல்வம் மற்றும் வெட்டுக்காடு பகுதி சேர்ந்த சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சொட்டுநீர் பாசனக் குழாய்களுடன் சரக்கு வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்தை கண்டறிந்துபறிமுதல் செய்தனர். பின்னர் சரக்கு வாகனத்தை கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.