சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2ஏ-ன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரிவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட 534 பணியிடங்களுக்கும், காவல் உதவியாளர், போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட 2006 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. குரூப்-2 மற்றும் 2 ஏ-க்களில் உள்ள 2,540 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த முதல்நிலை தேர்வு கடந்த 2024 செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.
இந்த பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு முடிந்து கடந்த 2024 டிசம்பர் 12ம் தேதி முடிவுகள் வெளியாகின. இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எதிர்கொண்ட நிலையில், 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். இதை தொடர்ந்து, 1936 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த நிலையில், 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரு வழி தொடர்பு அடிப்படையில் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.