சென்னை: ஒருங்கிணைந்த குருப்-4 பணிகள் தேர்வில் வனக்காப்பாளர், வனக்காவலர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 6வது கட்ட அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 12ம் தேதி தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குருப்-4 தேர்வில் அடங்கிய பணிகளில் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 6வது கட்ட அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 12 முதல் 16ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தெரிவிக்கப்படும். தனியே அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட மாட்டாது.