திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்னைகள் தொடர்பாகவும் பொதுமக்கள் 522 மனுக்கள் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 93 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 117 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 74 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 130 மனுக்களும் என மொத்தம் 522 மனுக்கள் வழங்கப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுகபுத்ரா, பொன்னேரி சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, திருத்தணி கோட்டாட்சியர் தீபா, தனித்துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.