திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அனைத்து வகையான நெகிழி பைகள், 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் நெகிழி பாட்டில்கள், அனைத்து வகையான நெகிழ் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதிக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாசக பதாகைகள் அமைக்க வேண்டும்
உணவகங்கள், பேக்கரி, அனைத்து கடைகளிலும் நெகிழி பாட்டில்களில் 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற வாசக பதாகைகள் அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலைக்கு செல்லும் வழித்தடங்களின் நுழைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி தடுப்பு சோதனை சாவடிகளை செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது ஒலி பெருக்கி, உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நெகிழி தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நெகிழி பயன்படுத்துவதால் கொடைக்கானல் மலைப்பகுதியின் பசுமை பாதிப்பு, விலங்கினங்கள் உயிரிழப்பு குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகளை தினமும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி நெகிழி பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்
கொடைக்கானல் நகராட்சி மற்றும் கீழ்மலை, மேல்மலை கிராமங்களில் அனைத்து வகையான நெகிழி பைகள், 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல், அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல், பரிசோதனை செய்தல், பறிமுதல் செய்தல் அபராதம் விதித்தல், கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற பணிகளை மாவட்ட அளவிலான நெகிழி தடுப்பு குழுவினர் மேற்கொள்ள வேண்டும். பசுமை கொடைக்கானலை பாதுகாக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் உதயா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்திய நாராயணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.