சென்னை: பசுமை எரிசக்தி கழகத்தின் புதிய இணையதளத்தை போக்குவரத்து துறை அமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சருமான சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார தலைமை அலுவலகத்தில் மாநிலம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர், மூன்று புதிய இணையதள சேவைகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி இணைய பக்கம்: பசுமை எரிசக்தி ஆதாரங்கள் குறித்த தகவல்களை வழங்குவதோடு, சூரிய மேற்கூரை மின் உற்பத்தி அமைப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியையும் இந்த பிரத்யேக பக்கம் கொண்டுள்ளது. வழங்குநர் இணைய முகப்பு: வாரியத்திற்கும் வழங்குநர்களுக்கும் இடையிலான தொடர்புகளை சீரமைக்கும் இந்த முகப்பு, விலைப்பட்டியல் சமர்ப்பிப்பு மற்றும் அதன் நிலையை கண்காணிப்பதை எளிதாக்குகிறது. புதிய வழங்குநர்களை பதிவு செய்தல், கொள்முதல் ஆணைகள் (Purchase Orders), கட்டண நிலவரம் போன்ற முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளுதல் மற்றும் நேரடி நிலவரங்களைக் கண்காணித்தல் போன்ற வசதிகளை இது வழங்குகிறது.
மனிதவள மேலாண்மை அமைப்பு: பணியாளர்களின் மனிதவள தேவைகளை நிர்வகிப்பதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட வலைதளமாக இது செயல்படும். இந்த தளத்தின் மூலம், பணியாளர்கள் தங்கள் சுயவிவரங்களை தாங்களாகவே எளிதாக புதுப்பித்துக்கொள்ள முடியும். அதேபோல், கடன் விண்ணப்பித்தல், GPF/CPS அறிக்கைகளைப் பதிவிறக்குதல், வருமான வரியைக் கணக்கிடுதல், படிவம் 16 பெறுதல் போன்ற அத்தியாவசியப் சேவைகளுடன், தடையில்லாச் சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று, பதிவிறக்கம் செய்யும் வசதிகளையும் இது வழங்குகிறது. இந்த புதிய இணையதளம் மற்றும் இணைய முகப்புகளின் அறிமுகம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.