இந்த ஆண்டு கோடைகாலம், முடிந்து மழை கொட்டினாலும் கூட வெப்பமும், வெயிலும் குறைந்தபாடில்லை. வெயிலிலிருந்தும், மாறும் காலநிலைக்கும் ஏற்ப நம் சருமத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். இதற்கு தீர்வுதான் வீட்டில் இருக்கும் கடலை மாவு
*ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து ஃபேஷியல் செய்துகொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
vவெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரியஒளி பட்டு முகம் கறுப்பாகும். இதனை நீக்க தேங்காய்ப் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து, முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
*நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துக்களில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊறவைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கிவிடும்.
*உருளைக்கிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது பார்லரில் ஃபேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம்.
– கே. பாலாஜிகணேஷ்.