*சமூக வலைதளங்களில் பேனர் வைரல்
உடன்குடி : மெஞ்ஞானபுரத்தில் உள்ள கரும்புசாறு கடை ஒன்றிற்கு சாறு பிழிய பிஇ, பிஏ, பி.எஸ்.சி., படித்த பட்டதாரிகள் வேலைக்கு தேவை என வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தற்போது பல்வேறு தொழில்கள் பெருகி வருகின்றன. எனினும் பழைய காலம் போல மக்களிடம் உடல் உழைப்பு என்பது குறைந்து வருகிறது. இயந்திரங்கள் மூலம் பணி நடந்தாலும் பணிபுரிய சொற்ப நபர்களே தேவையென்றாலும் அதற்கும் வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு குவிந்து வருகின்றனர். மேலும் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை தான் பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதால் பல துறைகளில் வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் கரும்புகடை ஒன்றில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பேனரில் கரும்பு சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் ரூ. 18ஆயிரம், வேலை நேரம் காலை 8.30 முதல் இரவு 9.30 மணி வரை, கல்வி தகுதி பிஇ, பிஏ, பிஎஸ்சி, வயது வரம்பு 25 முதல் 40 வரை என தொடர்பு எண் அளித்துள்ளனர். இந்த பேனரின் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.