ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே அரசு பஸ் மீது டாராஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். பெங்களூரில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து, வண்டலூர் – வாலாஜாபாத் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, நேற்று காலை 7 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடம் மேம்பாலம் பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் இறங்குவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்றிருந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் அதிவேகமாக மோதியது. இதில், லாரி ஓட்டுநர் உள்பட பேருந்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த 16 பேருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார், பலத்த காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரும்புதூர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.