திருவனந்தபுரம்: தமிழக அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் மரணமடைந்தால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்த பிறகு இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சினிமா நடிகர், நடிகைகள் உள்பட சமூகத்தில் பிரபலமானவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.