சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பல்கலைக்கழக வேந்தர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நமது முதல்வர் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளார். இத்தகையை சிறப்பு மிக்க நடவடிக்கையை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மே 3ம் தேதி மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு எனும் தலைப்பில் பாராட்டு விழா நடைபெறும்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அவர்கள் ஒதுக்கிய ஒட்டுமொத்த நிதி ரூ.36,785 கோடி. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு உயர் கல்வித்துறைக்கு வழங்கிய நிதி ரூ.34,710 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடி. இந்த 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி. கடந்த ஆட்சியில் கல்லூரிகள் 40, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 19 ஆக மொத்தம் 59 கல்லூரிகள். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் 21 கல்லூரிகள், கூட்டுறவுத் துறையில் 1 கல்லூரி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் 4 கல்லூரிகள், இந்த ஆண்டு 11 கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளை இந்த அரசு திறந்திருக்கிறது என்று சொன்னால், நிதிச் சுமையிலும் புதிய கல்லூரிகளை தந்தவர் முதல்வர்.