கோவை: ‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட மாட்டார்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார். ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை. போலி பத்திரிகையாளர்களால் கடுமையாக உழைக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு அவப்பெயர் உள்ளது.
பாகிஸ்தான் வீரர்களிடம் ஜெய் ராம் என பார்வையாளர்கள் கூறிய விவகாரத்தில், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜவை வளர்ப்பது மட்டுமே என் குறிக்கோள்.
தீவிரவாதத்தை தீவிரவாதமாகவே பாஜ பார்க்கிறது. ஒரு மதமாக பார்க்கவில்லை. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்கள் இருக்கிறது. பாஜவை வலிமைப்படுத்துவதற்கான பணிகளை தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.