Saturday, September 23, 2023
Home » குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு அறிவித்த திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் சாதனை: துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு அறிவித்த திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் சாதனை: துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

by Karthik Yash

சென்னை: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால் அதுதான் அரசின் சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திட்டங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். மேலும், களஆய்விற்கு செல்லும்போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

தொடர்ந்து, பணிகள் முன்னேற்றம் குறித்து பார்வையிட அமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பணிகளின் முன்னேற்றம் குறித்த புகைப்படங்களையும் வாரந்தோறும் பதிவேற்றம் செய்திட வேண்டும். ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் – அது எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பதுதான் முக்கியம். எனவே, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்தாலோசித்து உடனுக்குடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் (செலவுகள்) அதிகரிக்கும். அதனால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளை அழைத்து பாராட்டுங்கள்.

அறிவித்த திட்டங்கள் அரசு ஆணைகளாகி குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால் அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனையாகும். அந்த சாதனையை நிறைவேற்ற அரசு செயலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். முன்னுரிமை திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த திட்டங்களின் பயன்களை கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்று துறை செயலாளர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?