Thursday, May 15, 2025
Home செய்திகள்Showinpage எம்-சாண்டு, மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க அரசு உத்தரவு: கிரஷர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு

எம்-சாண்டு, மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க அரசு உத்தரவு: கிரஷர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு

by Francis

சென்னை: கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அதாவது 2024க்கு முன் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு, கனமீட்டருக்கு 56 ரூபாய் ராயல்டி தொகை இருந்தது. 2024ம் ஆண்டில் ராயல்டி தொகை 90 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் சிறு கனிம நிலவரி என்ற புதிய வரியை தமிழக அரசு விதித்தது. மேலும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்டியை தற்போது டன் என்று அளவுக்கு மாற்றபட்டது. இதனால் 90 ஆக இருந்த ராயல்டி தொகை தற்போது 165 ஆக செலுத்த வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஒரு யூனிட் ஜல்லியின் விலை 1500 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல்குவாரியில் வெட்டி எடுக்கும் கனிமங்களை கன மீட்டர் அளவிலே கணக்கிட வேண்டும். டன் அளவில் கணக்கீடு செய்து ராயல்டி பெறக் கூடாது.

மேலும் புதிதாக விதித்த சிறு கனிம நிலவரி விதிப்பை கைவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த கல் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு, பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்யப்படும் என்பதை அச்சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணை ஒருவார காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவணவேல்ராஜ், கிரஷர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, சங்கத்தின் உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi