உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை, மோகன், சேகர். இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த சக்திவேல், செல்வராஜ் குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் இரண்டு தரப்பை சேர்ந்த ஏழுமலை, மோகன், சேகர், சக்திவேல் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். சக்திவேலுக்கு தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்த 4 பேரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது திடீரென மருத்துவமனையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளிகள், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து உளுந்தூர்பேட்டை போலீசார் சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். இந்த மோதல் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழுமலை, மோகன், சேகர், சக்திவேல் செல்வராஜ், சம்பந்தம் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.