சென்னை: தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டி உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தகுதியான பயனாளிகள் யார் என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகைப் பெறுவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பட்டியலிட்டார். திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியத் தலைவர்களை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு;
* ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது
* மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்; உச்ச வயது ஏதுமில்லை
* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு
* சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம்ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு 1,000 கிடையாது
* ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருவாய் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது
* 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது: தமிழக அரசு
* பெண் எம்எல்ஏ, எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது: தமிழக அரசு
* எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்