Sunday, September 24, 2023
Home » அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் உடல் நலம் சார்ந்த விவரத்தை பதிவு செய்ய புதிய ‘ஆப்’: வகுப்பாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய உத்தரவு

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் உடல் நலம் சார்ந்த விவரத்தை பதிவு செய்ய புதிய ‘ஆப்’: வகுப்பாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய உத்தரவு

by Neethimaan

சேலம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை, இளம் வயதிலேயே கண்டறிந்து, அதற்கான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக, மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு TNSED SCHOOL APP Health and wellbeing செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை கண்டறிவதன் மூலம் பிறவிக் குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு, விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும். மேலும், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், தேவையான நேர்வுகளில் மூக்கு கண்ணாடி போன்ற தகுந்த உபகரணங்கள் வழங்கவும், உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்விவரங்கள் அடிப்படையாக அமைகிறது. எனவே, வகுப்பு ஆசிரியர்கள் செல்போன் ஆப்பில் தங்களது எமிஸ் அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தங்கள் வகுப்பிற்குரிய மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை வினாக்களுக்கு உரிய விவரங்கள் பெற்று பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இதன் அடிப்படையில், சிறப்புக்கவனம், தொடர் நடவடிக்கை தேவைப்படும் குழந்தைகளுக்கு மிக விரைவாக மருத்துவரின் ஆய்வு மற்றும் பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, இப்பொருள் சார்ந்து தனிக்கவனத்துடன் செயல்பட்டு, மிக விரைவாக அனைத்து மாணவர்களின் உடல்நலன் சார்ந்து சரியான முதல் நிலை விவரங்களை வகுப்பாசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்கான தகுந்த அறிவுறுத்தல்களை, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்கிட வேண்டும். செல்போன் ஆப்பில், மாணவர்களுடைய பெயர், வகுப்பு மற்றும் பிரிவை ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, அதை சரிபார்த்து செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும்.

எடை பார்க்கும் கருவி மற்றும் அளவை நாடா ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எடை மற்றும் உயரத்தை கணக்கிட வேண்டும். பதிவுகள் மேற்கொண்ட பின்பு திருத்தம் செய்ய இயலாது. ஆண் ஆசிரியர்கள் மாணவர்களையும், ஆசிரியைகள் மாணவிகளையும் மட்டுமே சோதனை செய்ய வேண்டும். இப்பணியில் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்திடவும், இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டி இருப்பதால், விரைவில் பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?