சென்னை: திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவகாலத்தின் போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம் தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையி கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால் தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மகளிர் முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் இந்த அரசு, அரசு பணிகளில் பணியாற்றி வரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இனிவரும் காலங்களில் அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டப்பேரவை 110ன் விதிகளின் கீழ் முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவகாலத்தின் போது துய்க்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சிறப்பு, தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் முன்பு முடிவுற்றவர்களுக்கு இச்சலுவை பொருந்தாது. மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம், 2016க்கு உரிய திருத்தங்கள் பின்னர் வெளியிடப்படும்.