சென்னை: திருமண முன்பணமாக இனிமேல், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருமணத்திற்காக வழங்கப்படும் முன்பணத்தின் தொகை ஆண் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மகன்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,000 ஆகவும், பெண் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மகள்களுக்கு ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆண் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மகன்களுக்கு திருமண முன்பணம் ரூ.6,000 ஆகவும், பெண் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மகள்களுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.
2025-26ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற விதி 110ன் கீழ், அரசு ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன் ஒருபகுதியாக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் திருமண முன்பணத்தை ரூ.5,00,000 ஆக உயர்த்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் இந்த ஆணை வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். தமிழ்நாடு நிதிக் குறியீட்டில் தேவையான திருத்தம் தனியாக வெளியிடப்படும்.