சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2ம் தேதி முதல் பள்ளிகளும் பின்னர் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்கள் பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதற்குண்டான கால அளவை கருத்தில் கொண்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.