சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6-ந் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பம் செய்ததில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுகள் முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. கடந்த 2023-24ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்திருந்தனர்.