ஈரோடு, மே 18: ஈரோடு கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 1,588 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, எல்.கே.ஜி. முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை சதவீதத்தை உயர்த்திட அறிவுறுத்தியது.
அதன்பேரில், அந்தந்த அரசு பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் தலைமையாசிரியர், ஆசிரியை, ஆசிரியர்கள், அவர்களது பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பதால் மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் அரசின் சலுகை மற்றும் இட ஒதுக்கீடு குறித்து, முதல்வரின் காலை உணவு திட்டம் போன்றவற்றை எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அம்மாபேட்டை ஆகிய 7 ஒன்றியத்தில் உள்ள 505 தொடக்கப்பள்ளிகள், 138 நடுநிலைப்பள்ளிகளில் தற்போது வரை 1,588 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். இதில், 85 சதவீதம் நுழைவு நிலை வகுப்பான 1ம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளதாக ஈரோடு தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தெரிவித்துள்ளார்.