புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்றது மோடி அரசின் தேசதுரோகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவி ஏற்று கடந்த 30ம் தேதியுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இதற்கு மோடியின் மக்களுக்கான நலத்திட்டங்களே காரணம் என பாஜவினர் பெருமை பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், “எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மோடி தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இது மோடியின் தேசதுரோகம். இந்தியாவை அழிக்கும் கொள்ளை. நாட்டில் உள்ள ஏழைகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களின் வருமானத்தை கொள்ளை அடிக்கிறது. இதுதான் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை” என்று தெரிவித்துள்ளார்.