சென்னை: அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தற்போது தமிழ்நாடு அரசின் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 2022 செப்டம்பர் முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சட்டப்பேரவையில் காலை உணவுத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.600.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.