ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (37). மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே ஹாலோ பிளாக் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று காலை அந்த கற்களுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது வினோத் குமார் வீட்டில் வளர்க்கும் ‘டாபர் மேன்’ ரக நாய், அந்த கற்கள் அருகே சென்று மோப்பம் பிடித்து குரைத்தது.
அங்கு மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பாம்பு கடித்ததில் அந்த நாய் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் குழுவினர் அங்கு வந்து 45 நிமிடம் போராடி பாம்பை லாவகமாக மீட்டு, வெங்கல் வனப்பகுதியில் விட்டனர்.