சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 31ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,645க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160க்கும் விற்க்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,620க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,960க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,638க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,104க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.