மண்டபம்: இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் படகில் கடத்தி வரப்படுவதாக மத்திய பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தென்கடல் எனப்படும் மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல் படை, மத்திய வருவாய் புலனாய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு, ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென்கடல் கரையை நோக்கி வந்தது. படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். படகில் இருந்து தப்பிக்க முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வேதாளையைச் சேர்ந்த முஹமது நாசர், அப்துல் கனி, பாம்பனை சேர்ந்த ரவி என தெரிந்தது. அவர்கள் படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்தனரா, பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க தங்கக் கட்டிகளை நடுக்கடலில் வீசி விட்டு வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.